Sunday 4 October 2015

NRIs & Taxes

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று வருவது என்பது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஒரு கனவாக மட்டுமே இருந்து வந்தது.
 
ஆனால் தற்போது கம்ப்யூட்டர் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சராசரி இந்தியர்களும் வெளிநாடு சென்று வருவதை மிகச் சாதாரணமான விஷயமாக ஆக்கிவிட்டது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வருமான வரி, அந்நிய செலாவணி குறித்த கேள்விகளும் அதிக அளவில் ஏற்படுகின்றன.
 
 
தொடரின் முதல் நாயகனான பாண்டியன், மதுரை மாவட்டம் நாச்சிக்குளம் கிராமத்தில் பிறந்து, இந்திய உணவு பழக்கத்தில் தன்னை வலுக்கட்டாயமாக  திணித்துக் கொண்ட கோலாவை தவிர வேறு எந்த வெளிநாட்டு வாடையும் இல்லாமல் வளர்ந்தார். பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்றில்லாமல் அவர் கிராமத்திலேயே முதன்முதலாக பட்டம் பெற்று, இந்தியாவின் முன்னனி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சேர்ந்து மூத்த அதிகாரியாக குறுகிய  காலத்திலேயே பதவி உயர்வு பெற்றார்.
 
தன் பணி நிமித்தம் அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா எடுக்கப்பட்ட நிலையில் குறுகிய காலத்திற்கு அவ்விடம் செல்ல தயாரானார். அவருடைய பிரம்மிப்பூட்டும் முதல் வெளிநாட்டுப் பிரயாணம், நவம்பர் 1 முதல் மார்ச் 31 வரை திட்டமிடப்பட்டிருந்தது. 
 
மீண்டும் இந்தியா வந்தவுடன், வருமான வரி தாக்கல் செய்கின்ற நேரத்தில் ஆடிட்டரை அணுகினார். ஆடிட்டர், இந்தியாவில் பெற்ற தொகை மட்டுமின்றி அமெரிக்காவில் வாங்கிய சம்பளத்தையும் வரிப்படிவத்தில் காண்பிக்க வேண்டும் என்றதும் சற்று அதிர்ந்துதான் போனார். ஆனால் அங்கே செலுத்திய வரியை இங்கே கழித்துக் கொள்ளலாம் என்பது தான் அவருக்கு  சற்று ஆறுதலைத் தந்தது.
 
பொதுவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) என்றால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றக் கருத்து நிலவுகிறது. இது பொது அளவில் உண்மையாக இருந்தாலும், சில கேள்விகளின் அடிப்படையில் தான் உண்மை நிலவரம் அறியப்படுகிறது. வெளிநாடு செல்லும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய தலையாய விஷயங்கள் என்னென்ன என்று முதலில் பார்ப்போம்.
 
ஒன்று, இந்தியாவை விட்டு வெளியே சென்ற மறு நிமிடமே ஒருவர் வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்பட மாட்டார்.  வருமான வரி சட்டம் மற்றும் FEMA  இந்தியாவை விட்டு செல்லும் ஒரு நபரின் குடியிருப்பு அந்தஸ்தை இரு வேறு முறையில் விவரித்துள்ளன. 
 
வருமான வரி சட்டத்தில் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்து ஒருவர் இந்தியாவில் தங்கிய நாட்களை வைத்து கணக்கிடப்படுகிறது. அதன்படி முந்தைய நிதி ஆண்டில், 
 
1) 182 க்கும் குறைவான நாட்கள். (அல்லது)
 
2) முந்தைய நிதி ஆண்டில் 60 நாட்கள் (மற்றும்) முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365க்கும் குறைவான நாட்கள்
 
இந்தியாவில் தங்கியிருந்தால், அவர்  வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்தை பெறுவார். 
இதற்கான விதிவிலக்குகள், இந்திய கப்பல் குழுவில் உறுப்பினராக அல்லது வெளிநாட்டில் வேலைவாய்ப்பு காரணமாக அல்லது இந்திய வம்சாவளியினராக (PIO) இருந்தால், (2)ம் விதி,  முந்தைய நிதி ஆண்டில் 180விட குறைவாக நாட்கள் மற்றும் முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365 நாட்களுக்கும் குறைவான நாட்கள் தங்கி இருந்தால் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்த்தை பெறுவார். 
 
அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின்(FEMA) படி, ஒரு நபர் முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 183 நாட்களில் விட குறைவாக தங்கி  இருந்தால் வெளிநாடு வாழ் இந்தியர் என்றாவார்.
 
இதற்கான விதிவிலக்குகள், வெளிநாட்டில் வேலை நிமித்தமாக, வணிகம் அல்லது தொழில் துவங்க இந்தியாவுக்கு வெளியே சென்று, நிச்சயமற்ற காலம் இந்தியாவில் தங்க அவர் விருப்பத்தை குறிக்குமேயானால் அவர் இந்தியாவை விட்டு வெளிவந்த நாளிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர் ஆகிரார். 
 
குடியாளர் அந்தஸ்த்துக்கேற்ப வரிக்கு உட்படித்தப்படும் வருமானமும் மாறுபடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அத்தகவலை காண்க.
 
குடியாளர் அந்தஸ்த்து வரிக்கு உட்படித்தப்படும் வருமானம்    
இந்திய குடியாளர்
 
1) இந்தியாவில் ஈட்டிய வருமானம் மற்றும்
 
 2) இந்தியாவிற்கு வெளியே ஈட்டப்பட்ட அனைத்து வருமானங்களும்.    
 
வெளிநாட்டு வரிதாரர்
1) இந்தியாவில் ஈட்டிய வருமானம்
 
 2) இந்தியாவில் ஈட்டியதாக கருதப்படும் வருமானம்   
 
 1) இந்தயாவில் உள்ள வியாபாரத் தொடர்பினாலோ
 
 2) இந்தயாவில் இருக்கும் பலதரப்பட்ட சொத்துகளிலிருந்தோ
 
 3) இந்தயாவில் செய்த வேலைக்காக வாங்கிய சம்பளமாக இருந்தாலோ
அவையனைத்தும் இந்தயாவில் ஈட்டிய வருமானங்களாகக் கருதப்படும்.
 
வருமான வரிச்சட்டப்படி ஒரு இந்திய குடியாளர், தன் அனைத்து வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டும். ஆனால் அவ்வருமானம் இந்தியாவில் சம்பாதிக்காத பட்சத்தில் அதற்கான வரியை வெளிநாட்டில் செலுத்தியிருந்தால், இரட்டை வரி ஒப்பந்தத்தை கருத்தில் கொள்ள வேண்டும். 
 
இரட்டை வரி ஒப்பந்தம் என்பது ஒரே ஆண்டில் ஒரு வரிதாரர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு இரு நாடுகளில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்கான ஒன்று. எந்த நாட்டில் வரிகட்ட வேண்டும் என்பதை இரட்டை வரி ஒப்பந்தத்தை வைத்து தான் தெளிவுபெற முடியும்.  
 
இந்தியா 85க்கும் மேலாக நாடுகளோடு இரட்டை வரி ஒப்பந்தங்களை (Double Taxation Avoidance Agreements) கொண்டுள்ளது. நீங்கள் அந்த நாடுகளில் சம்பாதித்த தொகைகளுக்கு அங்கேயே வரி செலுத்த வேண்டும் என்றால், இந்தியாவில் வெளிநாட்டு வருமானத்திற்கு, வெளிநாட்டு வரி கழிப்பைப் (Foreign Tax credit) பயன்படுத்தலாம்.
 
இதில் ஆராய வேண்டிய விஷயம், பாண்டியன் தொழில் சம்மந்தமாக வெளிநாடு சென்றுள்ளார், எனவே 182 நாட்களுக்கு மேலாக அவர் இந்தியாவில் இருந்துள்ளதால், அவர் வரி தாக்கலுக்காக இந்திய குடியாளராகவே கருதப்படுவார். 
(தொடரும்)

No comments:

Post a Comment