Sunday 4 October 2015

Going abroad on official work?

அரவிந்தனுக்கு சிறு வயது முதலே அவன் அமெரிக்க மாமா மீது கொள்ளை பிரியம். அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் ஏதேதோ கேள்விப்படாத மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் வாங்கி வருவார். ஊரில் அனைவரும் அவரிடம் நலன் விசாரிக்க வந்துவிடுவர். 
என்னதான் மாமாவை மிகவும் பிடித்தாலும், அவர் வந்துவிட்டால் அரவிந்தனுக்கு மவுசு குறைந்துவிடும் என்பதாலோ என்னவோ எப்படியாவது அமெரிக்கா சென்று மாமாவை விட பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். 
 
24 வயதானது, இதோ கிளம்பிவிட்டான் அமெரிக்கா! 
 
மாதம் 7000 டாலர் சம்பளம். அறுபதால் பெருக்கி ஊரெல்லாம் போஸ்டர் அடித்தாள் அரவிந்தனின் தாய். ஊரில் அரவிந்தனை பற்றிதான் பேச்சு. தன் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிய சந்தோஷத்தில் இருந்த அரவிந்தனை அவர் அப்பா ஒரு நாள் ஆபீஸுக்கு வரச்சொன்னார். அங்கே அவருடைய பேங்க் நண்பர் ஆனந்த் அங்கிள் இருந்தார்.
 
பல அறிவுரைகளுக்கு பிறகு, அவன் தான் சம்பாதிக்க இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை எப்படி சேமிப்பது, எம்மாதிரி வங்கிக்கணக்குகளை வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து கூறத்தொடங்கினார். அத்தனை நேரம் மூடி இருந்த காதுகளை சற்று திறந்துகொண்டார். 
 
வெளிநாடு செல்லும் ஒருவர் ரிசர்வ் வங்கி அனுமதி எதுவும் இல்லாமல் மூன்று பொதுவான கணக்கு வகைகள் வைத்துக் கொள்ள முடியும். 
 
• FCNR 
 
• குடியாளர் அல்லாத சாதாரண ரூபாய் கணக்கு (NRO கணக்கு)
 
• குடியாளர் அல்லாத (வெளிப்புற) ரூபாய் கணக்கு (NRE கணக்கு)
 
-  ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்,
 
FCNR கணக்குகளை 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையான நிரந்தர வைப்பு நிதியாக மட்டுமே துவங்க முடியும். வெளிநாட்டிலிருந்து வங்கிகள் மூலமாக அனுப்பும்அந்நிய செலாவணியிலேயே இக்கணக்கை வைத்துக் கொள்ளலாம். FCNR கணக்குகளிலிருந்து வரும் வட்டி வருமான வரிக்கு உட்படுத்தப்படாது. 
இங்கிருந்து வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லவும் எந்த தடையும் இல்லை. FCNR வைப்புக்கள் உள்ளூர் வைப்புகளை விட உங்கள் வெளிநாட்டு நாணயத்திலிருந்து அதிக வருமானத்தை சம்பாதிக்க சிறந்த வழியாக உள்ளது. சில வங்கிகள் வைப்புகளின் மேல் 85% வரை கடன் அளிக்க தயாராக உள்ளன. 
 
NRO கணக்கு
 
வேலை அல்லது இந்தியாவுக்கு வெளியே ஒரு தொழில் நிறுவுவதற்காக  இந்தியாவை விட்டு செல்பவர் மட்டுமே திறக்க முடியும் என்ற ஒரே வேறுபாட்டைத் தவிர ஒரு சாதாரண வங்கி கணக்கு போன்றே NRO கணக்கு செயல்படும். இந்த கணக்குகளை , வெளிநாட்டு ரூபாய் கணக்குகளிலிருந்து பணம் அனுப்பி திறக்க முடியும். இக்கணக்கு ரூபாயில் வகுக்கப்பட்டடிருக்கும். 
 
இந்தியாவில் NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட வைப்புகள்:
 
NRE கணக்குகளில் இருந்து அனுப்பப்படும் பணம்.
இந்தியாவுக்கு வெளியே பெறப்படும் வருமானம்.
தற்காலிக வருகையின் போது கணக்கில் செலுத்தப்படும் பணம்.
வாடகை , ஈவுத்தொகை , ஓய்வூதியம், வட்டி போன்ற உள்ளூர் வருமானம்
சொத்துக்களை விற்று வாங்கிய தொகை
NRO கணக்கில் அனுமதிக்கப்பட்ட எடுப்புகள்:
உள்ளூர் செலவுகள்
NRE கணக்குகளில் செலுத்துவதற்காக பணம் எடுத்தல். 
 
NRE கணக்கு
 
NRE கணக்கும் கிட்டத்தட்ட NRO கணக்கைப் போலவே செயல்படும். ஒரு சில மாற்றங்கள் மட்டும் இருக்கும். அவற்றை கீழே காண்போம். 
 
1. கூட்டுக் கணக்குகள்: இரண்டு அயல்நாடு வாழ் இந்தியர்கள் சொந்தமாக ஒரு கூட்டு கணக்கை NRE அல்லது NRO கணக்கில் இயக்க முடியும். இந்தியாவில் உள்ள நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து  NRO கணக்கைத் துவங்கலாம். ஆனால் NRE கணக்கில் கூட்டு உரிமையாளராக ஒரு குடியாளரை சேர்க்க முடியாது. 
 
2. வரிச்  சலுகை: NRE கணக்கிலிருந்து ஈட்டிய வட்டி இந்தியாவில் வரிக்கு உட்பட்டது இல்லை. ஆனால் NRO கணக்கில் வரும் வட்டிக்கு 30% வரியை கழித்துவிட்டு பாக்கியை மட்டுமே அளிப்பர். 
 
3. வெளிநாட்டிற்கு பணத்தை திரும்ப அனுப்புதல்: NRE கணக்குகளில் (அசல் மற்றும் வட்டி) இருந்து வெளிநாட்டிற்கு எந்த தடையும் இன்றி பணத்தை திரும்ப அனுப்பலாம். NRO கணக்கில் இருந்து அனுமதி பெற்ற பின் தான் பணம் அனுப்ப முடியும். ஒரு வருடத்தில் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக மட்டுமே  வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப முடியும். அதற்கும், பட்டயக் கணக்காளரிடமிருந்து வருமான வரி செலுத்திவிட்டதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.  
 
4. கடன் பெருதல் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு எதிராக ரூபாய் கடன் பெறலாம். ஆனால் அந்நிய செலாவணியில் கடன் பெற NRE வைப்புகள் மட்டுமே உதவும். 
 
5. உள்நாட்டு வருமானத்தை செலுத்துதல் : NRE கணக்கில், உள்நாட்டு வருமானத்தை நேரடியாக செலுத்த முடியாது. 
 
6. வட்டி விகிதம் : NRO மற்றும் NRE வைப்புகளுக்கு, சாதாரண வைப்புகளுக்கு தரும் வட்டியை விட, வட்டி விகிதம் அதிமாகதான் உள்ளது. வட்டி வழங்குவதில் வங்கிகளுக்கு எந்த வரம்பும் அளிக்கப்படுவதில்லை.
குடும்பத்தின் நிதி தேவைகளைப் பொறுத்து எந்த கணக்கை பராமரிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவில் அவசர தேவைகள் இருந்தால், NRO கணக்கிலும், எளிதாக வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப NRE கணக்கிலும், வட்டி சம்பாதிக்க ஒரு வைப்பு வைத்துகொள்வதாக இருந்தால் FCNR கணக்கிலும் பணத்தை முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று கூறி முடித்தார். 
 
“என்னடா? எல்லா பணத்தையும் செல்போன் வாங்கியே கரியாக்க போரயா இல்ல அங்கிள் சொன்னத கொஞ்சமாவது கேட்பாயா” என்று தன் வழக்கமான சிடுசிடுப்புடன் கேட்ட அப்பாவிடம் தலையை ஆட்டி வைத்த அரவிந்தன், தன் பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதை தானும் அறிந்த மகிழ்ச்சியில் திளைத்தார். 

No comments:

Post a Comment